கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற இவ் வலைத்தளத்தை நாடவும். வர்த்தமானி, பரீட்சை வினாத்தாள்கள், பாடக்குறிப்புக்கள், கல்வி தொடர்பான செய்திகள் | மேலும், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இவ்வலைத்தளம் அமையும். E - AKARAM

அகநானூறு - "யாயே, கண்ணினும்..."

அகநானூறு - 12


  • பாடியவர் : கபிலர் 
  • திணை : குறிஞ்சி
  • துறை : தோழி இரவுக்குறியை மறுத்து வரைவு கடாயது.

பாடல்: 

யாயே, கண்ணினும் கடுங் காதலளே;
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி சிவப்ப,
எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்;
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே;
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்,
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை,
விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார்,
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம்
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம்,
மழை படு சிலம்பில் கழைபட, பெயரும்
நல் வரை நாட! நீ வரின்,
மெல்லியல் ஓரும் தான் வாழலளே.

பொருள் :

என்னுடைய தாயோ, என் கண்களைக் காட்டிலும் மிகவும்  அன்பு கொண்டவள். 
​என்னுடைய தந்தையோ, நான் நிலத்தில் அடி எடுத்து வைப்பதைக் கூடப் பொறுக்க மாட்டான். தன் மகளை நோக்கி
" 'சிறிய கால்கள் சிவக்கும்படியாக, நீ ஏன் நடக்கின்றாய்? ' என்று கேட்பார்."
​நானும் இவளும் (தலைவியும் தோழியும்) பிரிவில்லாத, உறுதியான (துவர்ப்பில்லாத) நட்பினால் பொருந்தி,
​இரண்டு தலைகளைக் கொண்ட ஒரு பறவை போல ஒரே உயிராய் ஒன்றுபட்டுள்ளோம்.
தினைப் புனத்தைக் காக்கும் அழகிய பெண்கள் விடாது ஆரவாரிக்கும் பொழுதெல்லாம் கிளிகள் தங்கள் இனத்தை அழைக்கும் இடத்தில், அணில் விளையாடும் கிளைகளையுடைய 
பெரிய பழங்களையுடைய பலா மரத்தின் பழங்களின் பயனைக் கொள்வதற்குக் குறவர்கள் நட்டிய குடிசை மறையும்படி தேன் சொட்டும் வேங்கை மலர்கள் பரவியதைப் புலி என்று நினைத்து அஞ்சி புள்ளியுடைய யானைகள் முகிலினம் பொருந்திய மலைச் சரிவில் மூங்கில் முறிபட ஓடும் நல்ல மலைகளையுடைய நாடனே!  நீ இரவு நேரத்தில் வந்தால் மென்மையான என் தோழி உயிர் வாழ மாட்டாள்!
(உன் வரவு அவளுக்குத் துன்பத்தையே தரும்.)


உள்ளுறை (இறைச்சி)

​பலாப்பழம் தரையில் விழாமல் இருக்க, குறவர்கள் அடியில் குடில் அமைப்பது போல, தலைவிக்குச் சிறிதும் துன்பம் நேராமல் இருக்க, அவளுடைய தாயும் தந்தையும் கடுமையான காவலில் வைக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், இரவில் தலைவன் வருவதால் அவளுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால், அவள் வாழ மாட்டாள் என்று தோழி எச்சரிக்கிறாள். எனவே, இரவில் வராமல் மணம் செய்து கொள்வதே சிறந்த வழி என்று மறைமுகமாக உணர்த்துகிறாள்.

Print Friendly and PDF

Post a Comment